நாள் 393
கூட்டமைப்பினர் அரசிடம் பெற்ற தரகு விபரம் வேண்டுமாம்!
இலங்கை அரசிடமிருந்து இரா.சம்பந்தன் முதல் கூட்டமைப்பினர் பணம் பெற்றிருப்பது எமக்கு தெரியும்.அவர்கள் எவ்வளவு பெற்றிருக்கிறார்கள் என்பதை விரிவாக மக்கள் முன்வைக்கவேண்டுமென வலிந்து காணாமால் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் கோரியுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்கள், இன்று பிற்பகல் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினர்.
பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விதமாக எதிர் கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர் தங்கியிருந்த தமிழரசுக்கட்சி தலைமையகம் முன்பதாக இந்தப் போராட்டத்தை இன்று முன்னெடுத்தனர்.
அப்போது அவர்கள் கூட்டமைப்பினருக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர். தமது பிள்ளைகளின் நிலமைகள் தொடர்பில் அக்கறையில்லாமல் பதவி சுகபோகங்களை அனுபவித்துவரும் கூட்டமைப்பினர் உடனடியாக தமது பதவிகளிலிருந்து விலகவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
பௌத்தத்திற்கு முன்னுரிமை,வடகிழக்கு இணைப்பின்மை,அரசியல் கைதிகள் விடுவிப்பின்மை,காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தை கண்டுகொள்ளாமைக்கென அரசிடமிருந்து எவ்வளவு பெறப்பட்டதென்பதை கூட்டமைப்பினர் வெளிப்படுத்த வேண்டுமென அப்போது அவர்கள் ஊடகங்கள் முன்னர் கோரியிருந்தனர்.
இதனிடையே காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலமைகள் தொடர்பில் உரிய பதிலை விரைவில் வழங்கத்தவறும் பட்சத்தில் வடக்கிலுள்ள சகல கூட்டமைப்பு அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராடப்போவதாகவும் உறவுகள் எச்சரிக்கை விடுத்தனர்.